பாண்டிச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
கடந்த மே மாதம், பாண்டிச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து நாராயனசாமி முதல் அமைச்சராக பதவி ஏற்றார். ஆனால், எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றவரே முதல் அமைச்சராக தொடர முடியும். அதாவது, பதவியேற்று 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
எனவே, அவர் போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அங்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அவருக்கு எதிராக, அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகர் களம் இறங்கினார். சேகருக்கு ஆதரவக பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வாக்குகள் சேகரித்தார். எனவே அந்த தொகுதியில் பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவில், சேகரை விட 11, 144 வாக்குகள் அதிகம் பெற்று நாராயணசாமி வெற்றி பெற்றார். இதன் மூலம் தனது முதல் அமைச்சர் பதவியை அவர் தக்க வைத்துக் கொண்டார்.
முக்கியமாக, அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகி உள்ளார். ஏனெனில், இதற்கு முன் 3 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது முதல் முறையாக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நாராயணசாமி “புதுச்சேரியில் உள்ள ரவுடிகளை ஒழித்து கட்டியுள்ளோம். அதற்கு மக்கள் கொடுத்த பரிசுதான் இந்த வெற்றி” என்று கூறினார்.