நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிறார். வரும் 21 ஆம் தேதி முதன் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரலாறு காணாத இந்த வெற்றியை பா.ஜ.கவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வதோதரா மற்றும் வாரணாசியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நரேந்திர மோடியை வாழ்த்திய பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த வெற்றியில் நரேந்திர மோடியின் பங்கு முக்கியமானது எனவும் மோசமான அரசு, ஊழல் மற்றும் பரம்பரை அரசியலை முடிவுக்கு கொண்டு வரவே மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர் என கூறினார்.