பீகார் தேர்தல் தோல்வி காரணமாக, உட்கட்சியில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை, இங்கிலாந்து ஊடகங்களும் கிண்டலடித்து உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில், அந்நாட்டு ஊடகங்கள் மோடி சந்தித்து வரும் அரசியல் வீழ்ச்சி பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகின்றன.
”சகிப்பின்மை குற்றச்சாட்டுக்கு மோடியின் அரசாங்கம் உள்ளாகி இருக்கிறது; அவரது கட்சி பீகார் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது; இந்த நிலையிலேயே பிரதமர் மோடி இங்கிலாந்து வருகிறார்” என்று இண்டிபெண்டெண்ட் கூறியுள்ளது.
”இந்தியாவின் ஆளும் கட்சியானது, ஒரு மாநிலத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது; அக்கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடியின் தேர்தல் வியூகத்துக்கு பீகார் ஒரு சோதனைக் களமாக மாறிவிட்டது” என்று தி கார்டியன் கூறியுள்ளது.
”நடப்பாண்டில் மட்டும் இந்திய பங்குச் சந்தை 4 சதவிகித சரிவை சந்தித்துள்ளது; இது இந்திய அரசு மீதான நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்துகிறது; ஆகையால் பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதற்கு இது சரியான தருணம் அல்ல” என்று ராய்ட்டர்ஸ் என்ற இங்கிலாந்து செய்தி நிறுவனம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.