உரி தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் 11 வருடங்களுக்குப் பின் நடத்திய அதிரடி தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆயுத உற்பத்தியாளர்கள், தொழிற்துறைகள், விநியோக ஒப்பந்தாரர்களிடம் எந்த நேரத்திலும் ஆயுதங்கள் தேவைப்படலாம் தயாராக இருங்கள் எனக் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் உடன் திடீரெனப் போர் மூண்டால், போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளதா என சரிபார்க்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து கணக்கிட்டு வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் குறுகிய நாட்களுக்குள் ஒப்பந்த அடிப்படையில் ஆயுதகளைப் பெற மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
சுகோய் மற்றும் போர் விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் முன்கூடியே வாங்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் மட்டும் அல்லாமல் சீனா - இந்தியா எல்லையிலும் தனது பாதுகாப்பு கட்டமைப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் இந்திய அரசு தனது ஆயுத பலத்தையும், ஆயுத தேவையையும் பூர்த்திச் செய்ய அனைத்து வழிகளிலும் செயல்படுகிறது.
இந்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை இதேபோன்ற ஆய்வை பத்தான்கோட் தாக்குதலுக்குப் பின்னும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.