ஜெ.வை பார்க்க அக்.15ம் தேதி சென்னை வருகிறாரா மோடி ?
ஜெ.வை பார்க்க அக்.15ம் தேதி சென்னை வருகிறாரா மோடி ?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரிக்க, வருகிற 15ம் தேதி, பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலிருந்தும் முதல் அமைச்சர்கள் அவரது நலம் பற்றி விசாரித்து சென்றனர்.
புதுச்சேரி, கேரளா முதலமைச்சர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் வரை ஜெ.வின் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர்.
மேலும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சமீபத்தில் அப்பல்லோ வந்தார். அதன்பின், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் நேற்று சென்னை வந்து, ஜெ.வின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். இதற்கிடையில், ஜெ.வை நேரில் வந்து பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகிற 15ம் தேதி, கோவா பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் போது, அப்படியே சென்னை வந்து, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.