விபத்து ஏற்படுத்திவிட்டு ஓடிப்போன ஒரு டிரைவர், உயிருக்கு போராடி கொண்டிருந்தவரின் செல்போனை தூக்கி சென்ற நபர் ஆகியோர் பற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லியில் சுபாஷ் நகர் பகுதியில், சாலையில் நடந்து செல்லும் ஒருவரை, டெம்ப்போவை ஒட்டி வந்த ஒருவர் இடித்து விட்டார். அடிபட்டவர் சாலையோரத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, இறங்கி வந்த பார்த்த டிரைவர், சிறிது நேரத்தில் டெம்போவில் ஏறி சென்று விடுகிறார்.
கீழே கிடப்பவரை, அந்த சாலை வழியாக செல்லும் ஒருவரும் காப்பாற்ற முன் வரவில்லை என்பதுதான் கொடூரம். அதை விடக் கொடுமை, அந்த வழியாக நடந்து செல்லும் ஒருவர், சாலையில் சிதறி கிடந்த, அடிபட்டு கிடப்பவரின் செல்போனை எடுத்துக் கொண்டு மிக இயல்பாக நடக்கிறார். அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் சாலையில் கிடந்த அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. எனவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை 7 மணி அளவில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். தகுந்த நேரத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் நிச்சயம் உயிர் பிழைத்திருப்பார்.
இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விசாரணையில், உயிரிழந்தவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மதிபூல் எனபதும், அவர் இரவு காவலாளியாக பணிபுரிந்து விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது போலீசார், விபத்து ஏற்படுத்திய டெம்போ டிரைவரையும், அவரின் செல்போனை எடுத்து சென்ற ஆசாமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.