மனைவியின் உடலை 10 கி.மீ தூக்கி சென்ற கணவன் : விசாரணை நடத்த நவீன்பட்நாயக் உத்தரவு
மனைவியின் உடலை 10 கி.மீ தூக்கி சென்ற கணவன்
ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் டானா மஜ்ஹய். இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.
சமீபத்தில், அவரின் மனைவி அம்மாவட்டதில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல், மரணமடைந்துள்ளார். அவரின் உடலை, மருத்துவமனையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரின் கிராமத்திற்கு எடுத்துச்செல்ல, மருத்துவமனையின் தரப்பில் உதவி செய்யவில்லை.
மனைவியின் உடலை மருத்துவமனையில் இருந்து, கிராமத்திற்கு எடுத்து செல்ல வாகனத்திற்கு பணம் இல்லாததால், அவர், தன் மகளுடன், மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு, நடந்தே தன் கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.
10 கிலோமீட்டர் நடந்த பிறகு, உள்ளூர் தொலைக்காட்சி குழுவினர் அவரை பற்றி விசாரிக்க, தன் நிலையை அவர்களிடம் கூறியுள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி குழுவினர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூற, மாவட்ட ஆட்சியர் பதறிப் போய் அவசர ஊர்தியை அனுப்பியுள்ளார். மேலும், ஹரிச்சந்திர யோஜனா திட்டத்தின் கீழ், மனைவியின் இறுதி சடங்கிற்கு செலவிற்கு அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக கருத்து தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையிலிருந்து சடலங்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.