படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த் அவரது அலுவலகத்திலே இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த் பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில், மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.
அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொரு மானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.