கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஹங்காலா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் மற்றும் சுபா தம்பதி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் 6 மாதம் முன்னதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த தம்பதியர் காதணி விழா நடத்தியுள்ளனர்.
குழந்தைக்கு வலிக்காமல் இருப்பதற்காக அனஸ்தீசியா ஊசி போட திட்டமிட்டுள்ளனர். இதற்காக பொம்மலபுரா ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவராக பணியாற்றும் நாகராஜ் என்பவர் ரூ.200 பெற்றுக் கொண்டு குழந்தைக்கு அனஸ்தீசியா ஊசி போட்டுள்ளார். ஆனால் வீரியம் அதிகமான ஊசியை போட்டதால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானது. மருத்துவர் போட்ட ஊசியே குழந்தை மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K