ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பாவைப்பார்த்து கண்ணடித்ததுடன் தவறாக நடந்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப் பாரம்பரிய மாளிகையை, ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பா ஆய்வு செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரிடம் தவறாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், வாலிபரை, அல்கா லாம்பா கன்னத்தில் அறைந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் வாலிபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அல்கா லாம்பா பேசுகையில், “வாலிபர் என்னை பார்த்து கண்ணடித்தார். அந்த வாலிபர் என்னை தவறான வழியில் பார்த்தார். அவர் நகராட்சி மன்றம் அருகே எனன்கை நெருங்கி வந்தார். உடனடியாக நான் அவரை கனனத்தில் அறைந்துவிட்டேன்.
பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து ஓட தொடங்கினார். உடனடியாக ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை விரட்டிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.” என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பா, தனது டுவிட்டரிலும் இது குறித்த தகவலையும், போட்டோவையும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், குற்றவாளி பால்ஜீத் நகரை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் ராஜேஷ் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.