2ஜி வழக்கு தொடர்பாக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர்களை சிறையில் அடைத்தால் அது முதலீட்டை பாதிக்கும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2ஜி வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சல்மான் குர்ஷித்தின் கருத்து வெளியான ஊடக செய்தியைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதிகள், இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது எங்களை பாதிக்கச் செய்யும் என்றனர்.
சல்மான் குர்ஷித்தின் கருத்து வெளியான ஊடக செய்தியைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி எச்எல்.தத்தி,"இது எங்களுக்கு குழப்பமாக உள்ளது.தொழிலதிபர்களை சிறையில் அடைப்பதில் உச்சநீதிமன்றம் ஆர்வமாக உள்ளது என்பது போன்ற தோற்றத்தை அமைச்சரின் அறிக்கை உண்டாக்கியுள்ளது.
அது எங்களை பாதிக்கச் செய்துள்ளது. அமைச்சர் வெளியிட்ட அறிக்கை சரியா தவறா? இதில் அரசின் நிலையை விளக்க வேண்டும்" என்றார்.