தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சந்திரசேகர ராவின் உடல் நிலை இரண்டு நாட்களுக்கு முன்பு மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார். ஆனால் மாணவர்களின் மிரட்டலை அடுத்து அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து மனித உரிமை கமிஷன் உத்தரவுப்படி கம்பத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை ஹைதராபாத் கொண்டு வரப்பட்டார் சந்திரசேகர ராவ்.
மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.