இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக பி.வி.நாயக் பதவியேற்றுள்ளார்.
இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த எப்.எச்.மேஜர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து, புதிய தலைமை தளபதியாக, பி.வி.நாயக் (வயது 59) தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
மராட்டிய மாநிலம், நாகபுரியில் பிறந்தவர் பி.வி.நாயக். அவரது முழுப் பெயர் பிரதீப் வசந்த் நாயக். இவர் கடந்த 1969ம் ஆண்டு ஜுன் 21ம் தேதி இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியில் சேர்ந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தேசிய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவரான நாயக், கடந்த 1971ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.