ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம கஜூவாகா பகுதியில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிக அதிக அளவாக 54 அடி உயர சிலையை நிறுவ அப்பகுதி இளைஞர்களும், வர்த்தகப் பிரிவினரும் முடிவு செய்துள்ளனர்.
பழைய கஜூவாகா கண்காட்சி மைதானத்தில் இந்த விநாயகர் சிலையை நிறுவ அவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பத் விநாயக் யூத் என்ற தன்னார்வ அமைப்பு மிக அதிக அளவு உயர விநாயகர் சிலைக்காக இரண்டரை லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாகவும், மேற்கு வங்க மாநிலம் மிதுனப்பூரில் இருந்து சிலை வடிவமைப்பதற்கான சிற்பி வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விநாயகர் சதுர்த்தி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைக்கும் பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.
விநாயகர் சதுர்த்தி முடிந்த 10 நாட்களுக்குள் அந்த சிலைகள் அருகில் உள்ள ஆறு, கடலில் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுவது வழக்கம்.