ஏர் இந்தியா நிறுவனத்தில் காண்டிராக்ட் வழங்குவதற்காக மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் ரூ.12.5 கோடி லஞ்சம் பெற்றதாக கனடா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னணி தலைவரான பிரபுல் பட்டேல், தற்போது மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பிரபுல் பட்டேல் இருந்தபோது, ஏர் இந்தியா நிறுவனத்தில், ரூ.50 கோடி மதிப்புள்ள காண்டிராக்ட் ஒன்றை வழங்குவதற்காக, பிரபுல் பட்டேல் ரூ.12.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி வர்த்தகரான 64 வயது நசீர் காரிகர் என்பவர் பிரபுல் பட்டேலிடம், இந்த லஞ்சத் தொகையை வழங்கியதாக, கனடா பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரபுல் பட்டேலுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வர்த்தகர் நசீர் மீது கனடா நாட்டு நீதித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு, ஒட்டாவா நகரில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வர இருப்பதாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.