ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று அமெரிக்கா செல்கிறார்.
பிரதமருடன் அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அயலுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாய் ஆகியோரும் செல்கின்றனர்.
சர்வதேச பயங்கரவாதம், ஐ.நா.வின் மனிதநேய அடிப்படையிலான செயல்பாடுகள், பாதுகாப்புக் கவுன்சில் சீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களைக் குறித்து பல உயர்நிலை விவாதங்களில் இவர்கள் பங்கேற்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் பொதுக்குழுவில் வரும் 24ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவது பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவில் ஒத்துழைப்பும் கூட்டு நடவடிக்கையும் தேவை என இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.