மணிப்பூரில் நடந்த தனித்தனி மோதல்களில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினரும், அஸ்ஸாம் ரைஃபில் படையினரும் தெரிவித்துள்ளனர்.
இம்பாலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்ஸாம் ரைஃபில் படை முகாமின் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியதாகவும், இதை எதிர்த்துப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கி ஒன்றும், 9 எம்.எம். பிஸ்டல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிசென்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் இராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அங்கு தங்கியிருந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மணிப்பூரில் இந்த ஆண்டு நடந்துள்ள தீவிரவாதம் தொடர்பான தாக்குதல் சம்பவங்களில் 135க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.