Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியின் ரீ-கவுண்ட் மினிஸ்டர் கமெண்ட் - சிதம்பரம் ஆவேசம்!

மோடியின் ரீ-கவுண்ட் மினிஸ்டர் கமெண்ட் - சிதம்பரம் ஆவேசம்!
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (14:27 IST)
FILE
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தில் பேசும் போது மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேசினார்.

சிதம்பரத்தை அவர் ‘‘ரீ- கவுண்ட்’’ மினிஸ்டர் (மறு எண்ணிக்கை அமைச்சர்) என்று குறிப்பிட்டார்.

மோடியின் இந்த கருத்திற்கு ப.சிதம்பரம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்:

கடின உழைப்பு மற்றும் உயர் கல்வி கற்றவர்களே இந்த நாட்டுக்கு தேவை. கடின உழைப்பு மட்டுமின்றி கடின மனம் படைத்தவர்கள் இந்த நாட்டுக்கு ஒருபோதும் தேவை இல்லை.

இவ்வாறு மத்திய மந்திரி சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

போலி என்கவுண்டரில் உண்மையை கொல்வதே நரேந்திரமோடியின் வழக்கம் என்று நான் ஒருமுறை கூறினேன். எத்தனை உண்மைகளை மோடி சிதைத்தார் என்பதற்கு பல உதாரணங்களை சொல்லியிருந்தேன். இப்பொழுது மோடியின் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் இன்னொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

மறு எண்ணிக்கை அமைச்சர் என்று மோடி என்னை கிண்டல் செய்திருக்கிறார். 2009-ல் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு முறைதான் வாக்குகள் எண்ணப்பட்டன. மறு எண்ணிக்கை நடைபெற வில்லை. இது எல்லோருக்கும் (மோடியை தவிர) தெரிந்த உண்மை.

இன்னும் சொல்லப் போனால், ‘‘என்னுடைய மறு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தது தவறு’’ என்பது தான் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இந்த உண்மையைத்தான் மோடி சிதைக்கிறார். இன்னும் எத்தனை உண்மைகளை சிதைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil