மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லாங்கர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பசுமை வேட்டைக்காக முகாமிட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களை வாபஸ் பெற வலியுறுத்தி அவர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வனப்பகுதியில் தங்கியிருக்கும் போது பாதுகாப்பு படையினர் பழங்குடியின பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், குடியிருப்புகளையும் தீ வைத்து எரிப்பதாக மாவோயிஸ்டுகள் குற்றம்சாற்றியுள்ளன.
இதனை கண்டித்து நடைபெற்று வரும் இந்த ஒரு நாள் முழு அடைப்பு காரணமாக லாங்கர், மேற்கு மிட்னாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பலத்த பாதுகாப்புடன் அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்பதால் இரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழு அடைப்பு காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை.