இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. மும்பையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்துரத்னா’ என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் திடீர் தீ விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி கடற்படை அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி பதவி விலகினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் கப்பல்கட்டும் தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ என்ற கப்பலின் எந்திர பகுதியில் நேற்று கார்பன்-டை-ஆக்ஸைடு பிரிவு திடீரென செயல் இழந்தது. மேலும், வாயு (கியாஸ்) கசிந்து விஷவாயு பரவியது.