பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மக்களவை துணைத் தலைவராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக கடந்த ஞாயிறன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.கே. அத்வானி, புதுடெல்லியில் நேற்று அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜை நியமித்து உத்தரவிட்டார்.
மாநிலங்களவையில் பாஜக துணைத் தலைவராக எஸ்.எஸ். அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்வானி தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அடுத்த தலைமுறை தலைவர்களை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஜேட்லி, சுஷ்மா நியமனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தமது நியமனம் குறித்து கருத்துக் கூறிய அருண் ஜேட்லி, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தலைவர்களை முறைப்படித் தேர்ந்தெடுப்பதாகவும், காங்கிரஸ் கட்சியைப் போன்று குடும்பத்தினர் தேர்வு செய்யப்படுவதில்லை என்றும் கூறினார்.