சென்னை: தமிழக தொழில்துறை செயலாளராக உள்ள எம்.எஃப். ஃபரூக்கி, மத்திய அரசுப் பணிக்குச் செல்கிறார். மத்திய சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலாளராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறையின் பங்கு மிக அதிகமாக உள்ள நிலையில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் ஃபரூக்க, அந்தத் துறையின் மூத்த அதிகாரியாக நியமி்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழக தொழில்துறை புதிய செயலாளராக, வணிக வரி மற்றும் பத்திர பதிவுத் துறையின் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் முதன்மை செயலாளரும், வணிக வரித்துறை ஆணையருமான டி.ஜேக்கப், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக இருக்கும் முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, வணிகவரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு அடிப்படையில் ஃபரூக்கி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் திமுக-காங்கிரஸ் அரசியல் உறவும் இருக்கலாம் என்று தெரிகிறது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிலும், நிதித்துறையிலும் பணியாற்றியுள்ள ஃபரூக்கி, சவுதி அரேபியாவில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.