ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாபா ராம்தேவ் மீது கறுப்பு மையை வீசியவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்று லீலா தீட்சித்துடன் அவர் இருக்கும் வீடியோவில் தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ் டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அங்கிருந்து அவர் புறப்பட்டு செல்லும் போது திடீர் என்று மர்ம நபர் ஒருவர் ராம்தேவ் மீது கறுப்பு மை வீசினார்.
உடனே ராம்தேவ் ஆதரவாளர்கள் பாய்ந்து சென்று மர்ம மனிதனை பிடித்துக்கொண்டனர். பின்னர் அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் பெயர் கம்ரான் சித்திக். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
சித்திக் பற்றி விசாரித்த போது டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோ படம் சிக்கியது. மேலும் ஷீலா தீட்சித்தை சந்தித்து சித்திக் எடுத்துக்கொண்ட போட்டாவையும் ராம்தேவ் ஆதரவாளர்கள் வெளியிட்டனர்.
சித்திக் காங்கிரஸ் ஆதரவாளர். மை வீசப்பட்டதற்கு காங்கிரசே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது பற்றி ஷீலா தீட்சித் கூறும் போது, அந்த வீடியோவில் இருப்பவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார். ராஜ்நாத் சிங்கிடம் கேட்ட போது அந்த வீடியோ எப்போது எங்கே எடுக்கப்பட்டது, என்னுடன் இருப்பது யார் என்று தனக்கு நினைவு இல்லை என்று கூறினார்.
பாரதீய ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறுகையில், சித்திக்கை எனக்கு தெரியும், உத்தரபிரதேச மாநிலம் ஓக்லா தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்தவர் என்றார். ராம்தேவ் மீது கறுப்பு மை வீசப்பட்டதற்கு பாரதீய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளே காரணம் என்று காங்கிரஸ் பேச்சாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார்.