''நாட்டுக்காக வாழவும் விரும்புகிறேன்; சாகவும் விரும்புகிறேன்'' என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறினார்.
உண்ணா விரதத்தை முடித்த பின் ஹசாரே பேசுகையில், சிறந்த மனிதர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொள்கிறேன்; அரசுக்குப் பயந்து இல்லை.
ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு மறுக்கிறது. அதனால், நாங்களே அரசியல் கட்சியைத் தொடங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.
பணம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை நாங்கள் மாற்றிக் காட்டுவோம். நான் நாட்டுக்காக வாழ விரும்புகிறேன்; சாகவும் விரும்புகிறேன்.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் நாடு முழுவதும் பிரசாரம் செய்வேன். மக்களிடம் "மாற்றம் தேவை'' என விளக்குவேன். மக்கள் ஆதரவு கிடைத்தால் ஊழல் இல்லாத அரசை அமைக்க முடியும்.
எங்கள் இயக்கத்தின் வலிமையை மத்திய அரசு உண்மையிலேயே அறிந்திருந்தால் வலுவான லோக்பால் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நிராகரிக்கவும், திரும்பப் பெறவும் உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பணம் இருந்தால் அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்குச் சரியான பாடம் புகட்டுவோம்.
நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன், ஆட்சியிலும் பங்கேற்க மாட்டேன். நாங்கள் தொடங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பேன். தேர்தலின்போது அரசியல் கட்சிகள் எவ்வளவு பணம் அளித்தாலும் ஆதரவாளர்கள் யாரும் மனம் மாறக் கூடாது என்று அன்னா ஹசாரே கூறினார்.