சொத்துகள் குறித்து சி.பி.ஐ விசாரிக்கக்கூடாது என்று தடைகோரிய ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ஆந்திர மாநில அமைச்சர் ஒருவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, அவரது சொத்துகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெகன்மோகன், உச்ச நீதிமன்றம் சென்றார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அதனை நிராகரித்தனர்.
நீதிபதிபதிகள் அளித்த தீர்ப்பில், இது சொத்துகள் தொடர்பான முதல்நிலை விசாரணைதான். இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது. சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள சொத்து அறிக்கையின் நகலை ஜெகன்மோகன் ரெட்டிக்கு நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.