கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், ' சீக்கியர்களுக்கான நீதி' என்ற அமைப்பின் சார்பில் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேற்கூறிய 'சீக்கியர்களுக்கான நீதி' ( Sikhs For Justice - SFJ) அமைப்பில் 1984 கலவரங்களில் உயிர் பிழைத்து, அமெரிக்காவில் வசிப்பவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அந்த நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் மட்டும் நவம்பர் 1984 ல் சீக்கியர்களின் படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தது என மேற்கூறிய அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பான்னன் தெரிவித்தார்.
இந்திய அரசின் ஆவணங்களின்படி 3296 சீக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியா முழுவதும் 35,535 பேருக்கு காயங்களும், உயிரிழப்பும் ஏற்பட்டது.
ஆனால் இந்த தாக்குதல்களின் நோக்கம், கடுமை போன்றவற்றை சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் என்ற அளவில் இந்திய அரசுகள் மூடிமறைத்துவிட்டன.
இந்த தாக்குதல்கள் கலவரங்களோ அல்லது டெல்லியில் மட்டும் நடந்ததோ அல்ல. உண்மையில் நவம்பர் 1984 ஆம் ஆண்டு 18 மாநிலங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்.காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில், ஒரே மாதிரியான முறையில் இந்த தாக்குதல்கள் நடந்தன என அவர் மேலும் குற்றம் சாட்டினார்.