சில தலைவர்கள் ஹிட்லர் போன்றவர்கள்; நான் மகாத்மா காந்தி வழியில் நடப்பவன் - மோடி மீது ராகுல் மறைமுக தாக்கு!
, வெள்ளி, 14 மார்ச் 2014 (17:37 IST)
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கினார். ‘சில தலைவர்கள் ஹிட்லர் போன்றவர்கள்; நான் மகாத்மா காந்தி வழியில் நடப்பவன்’என அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது பிரச்சார கூட்டங்களில், ‘மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஊழல் அரசு’ என்றும், ‘நான் பிரதமராக வந்தால் நாட்டின் காவலனாக டெல்லியில் இருப்பேன்’என்றும் கூறி வருகிறார்.அவருக்கு பதிலடி தருகிற வகையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கேதாவில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்தியாவுக்கு (மக்களுக்கு) தேவை காவலன் அல்ல. மக்கள் தங்கள் தேவையாக உரிமைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். குஜராத்தில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிப்பவர்கள், எப்படி விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முடியும்? இது ஒரு காவலன் செய்யக்கூடிய வேலையா?குஜராத் ஒளிர்கிறது. ஆனால் ஒரு சில மக்கள்தான் ஒளிர்கிறார்கள். ஏழைகளுக்காக, பெண்களுக்காக ஒளிரவில்லை.
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை எழுப்புகிறார்கள். நல்லது. ஆனால் சிலை வைப்பவர்கள், சிலை வைப்பதற்கு முன் யாருக்கு சிலை வைக்கிறார்களோ, அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சர்தார்பட்டேலை பற்றி பேசுவதற்கு முன்பு நீங்கள் (நரேந்திர மோடி) கற்றுக்கொள்ள வேண்டும்.