சுரங்க தொழிலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாற்றை தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு இன்று முன் பிணை கிடைக்காத பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
வீட்டு வசதி வாரிய நிலத்தை மனைவி அனிதாவுக்கு ஒதுக்கியதாவும், சுரங்க தொழிலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மீது லோக் ஆயுக்தா குற்றம்சாற்றியிருந்தது.
இது தொடர்பாக கடந்த 5ஆம் தேதி ஆஜராக குமாரசாமிக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உடல் நிலை காரணத்தை காட்டி அன்று குமாரசாமி ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் குமாரசாமி ஆஜராக உள்ளார்.
இதனிடயே முன் பிணை கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் குமாரசாமி, அவரது மனைவி அனிதா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
அப்போது அவர்களுக்கு பிணை கிடைக்காத பட்சத்தில் குமாரசாமி, அவரது மனைவி இருவரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.