உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 2500 கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிடும் என முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பாற்ற சம்பா சாகுபடிக்கு நாள்தோறும் 2 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே வழங்கும் 7,500 கனஅடி நீரோடு கூடுதலாக 2500 கன அடி நீரைத் திறக்க கர்நாடக அரசு சம்மதித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று முதல் 20ஆம் தேதி வரை நாள்தோறும் 10 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்து விடுமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, காவிரியில் இருந்து இன்று முதல் கர்நாடகா கூடுதல் தண்ணீரை திறந்துவிடுகிறது. இதனால், தமிழகத்திற்கு தற்காலிகமாக தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் கிடைக்கும் என்பதால் சம்பா சாகுபடி செய்துள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, டெல்லியில் வரும் 19ஆம் தேதி பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது.