இந்திய மத்திய அரசின் புதிய அயலுறவுச் செயலராக இன்று காலை பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் மத்தாயும், அவருக்கு முன் இருந்த நிருபமா மேனன் ராவைப் போல, கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
1974 ஆம் ஆண்டு இந்திய அயலுறவுப் பணியில் சேர்ந்த ரஞ்சன் மத்தாய், இஸ்ரேல், ஃபிரான்ஸ் நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், லண்டன் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளவர்.
இந்திய அயலுறவு அமைச்சகத்தில் வங்கதேசம், மியான்மர், மாலைத் தீவுகள், இலங்கை ஆகியவற்றின் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பை கூடுதல் செயலராக இருந்து கவனித்து வந்தவராவார்.
இவர் கேளர மாநிலம் மாவேலிக்கரா எனும் இடத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரையும் சேர்த்து இந்தியாவின் அயலுறவுச் செயலர்களாக தொடர்ந்து மூன்றாவது மலையாளியாக ரஞ்சன் மத்தாய் வந்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் நடந்தபோது அயலுறவுச் செயலராக இருந்தவர் சிவ் சங்கர் மேனன். அப்போது தேச பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் எம்.கே.நாராயணன், இவரும் மலையாளி.
எம்.கே.நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக பொறுப்பேற்றவுடன், அவர் வகித்த தேச பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் சிவ் சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார். சிங் சங்கர் மேனன் வகித்த அயலுறவுச் செயலர் பொறுப்பிற்கு நிருபமா மேனன் ராவ் நியமிக்கப்பட்டார். இப்போது நிருபமா மேனன் ராவ், அமெரிக்காவிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்த பொறுப்பிற்கு ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.