Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி 12 சிலிண்டர்கள்! ராகுல் பேசியவுடன் அறிவிப்பு!

இனி 12 சிலிண்டர்கள்! ராகுல் பேசியவுடன் அறிவிப்பு!
, சனி, 18 ஜனவரி 2014 (09:51 IST)
FILE
வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 12 ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி அறிவித்தார். ராகுல் காந்தி கேட்டுக்கொள்ள 'இதோ' என்று இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தற்போது வீடுகளுக்கு மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

9 சிலிண்டர்களுக்கு அதிகமாக பயன்படுத்தும் குடும்பத்தினர், வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு (ஒரு சிலிண்டருக்கு ரூ.1,258) கியாஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், பேசிய ராகுல் காந்தி, மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று நிருபர்களிடம் பேசிய..

webdunia
FILE
மத்திய மந்திரி வீரப்ப மொய்லி, மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9-ல் இருந்து 12 ஆக அதிகரிக்கப்படும் என்றும், அது குறித்து மத்திய மந்திரிசபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த பெட்ரோலியம் அமைச்சக அதிகாரிகள், சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து மத்திய மந்திரி உத்தரவு வெளியானதும், அது தொடர்பான திட்டக்குறிப்பை மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழுவிற்கு அனுப்பி வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர் (14.2 கிலோ) ஆண்டுக்கு 9 என்பது ஒரு குடும்பத்துக்கு போதாது என்றும், இதை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தார்.

கடந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து இருந்த மந்திரி வீரப்ப மொய்லி, “நாடு முழுவதிலும் சமையல் கியாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 15 கோடி பேர் உள்ளனர்.

அவர்களில் 89.2 சதவீதம் பேருக்கு 9 சிலிண்டர்கள் போதுமானது. இதனால் 10 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை வாங்கி வருகிறார்கள். இந்த ஒதுக்கீடு எண்ணிக்கை 12 சிலிண்டர்களாக உயர்த்தப்பட்டால் 97 சதவீத வாடிக்கையாளர்களுக்கு முழு அளவில் மானிய விலை சிலிண்டர்கள் கிடைக்கும்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதன் மூலம், மத்திய அரசு வழங்க வேண்டிய மானியச்சுமை, ரூ.3,300 கோடியில் இருந்து ரூ.5,800 கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானியச்சுமையை குறைப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் கிளம்பிய கடும் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு, கடந்த ஆண்டு (2013) ஜனவரியில் இந்த எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தி இருந்தது. இனி, ஆண்டுக்கு12 சிலிண்டர்களாக உயர்த்தப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil