ஆந்திராவில் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி
, சனி, 28 டிசம்பர் 2013 (18:39 IST)
பெங்களூரிலிருந்து மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்தெத் நகருக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நந்தெத் நகருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மா வரம்- பென்னுகொண்டா இடையே கொத்தசேரவு ரயில் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.திடீரென இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் தீ பிடித்தது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ பிடித்தது யாருக்கும் தெரியவில்லை. ரயில் ஓடிய வேகத்தில் காற்றின் தாக்கம் காரணமாக தீ மளமளவென பரவியது. 3.15 மணிக்கு அந்த ஏசி. பெட்டிக்குள் புகை பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகே ரயிலில் தீ பிடித்து இருப்பது பயணிகளுக்கு தெரிய வந்தது.அந்த ஏ.சி. பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயிர் தப்பிக்க உதவி கோரி அலறினார்கள். உயிர் தப்பிக்க எல்லா பயணிகளும் வாசல் பகுதிக்கு முண்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. சில பயணிகள் பெட்டியில் இருந்து வெளியில் குதித்தனர். சுமார் 50 பயணிகள் கடும் புகை மூட்டம், தீயில் சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே ரயில் தீ பிடித்த தகவல் மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக அவர்கள் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள்.எல்லா பயணிகளும் பயந்தபடியே கீழே இறங்கினார்கள். ஏ.சி. பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்தன. அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஏ.சி. பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். இதற்கிடையே பெங்களூரில் இருந்து மீட்புக் குழுவினரும் மருத்துவக் குழுவினரும் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக மீட்புப் பணியை தொடங்கினார்கள். அப்போது ஏ.சி. பெட்டிக்குள் 23 பயணிகள் தீயில் கருகி பலியாகி கிடப்பது தெரிந்தது. அவர்களில் 2 பேர் குழந்தைகள். பலரது உடல் முழுமையாக எரிந்து கரிக்கட்டை போல ஆகிவிட்டது.
23
பேர் பலியான தகவலை அனந்த்பூர் மாவட்ட கலெக்டர் லோகேஸ்குமார் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அதிகாலை இருள், பனி, புகை மூட்டம் காரணமாக மீட்புப் பணிகளை விரைந்து முடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு மீட்புப் பணி முடிந்தது. 12 பயணிகள் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் புட்டப்பர்த்தி மற்றும் தர்மாவரம் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.