ஊழல் எதிர்ப்புக்கான வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அண்ணா ஹசாரே போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டு, அவர் ஏற்கனவே கூறியபடி, அரசியல் பிரவேசம் குறித்து பரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வி.கே.சிங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ, முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர் உள்ளிட்ட 22 பேர் எழுதிய கடிதத்தை இன்று உண்ணாவிரத மேடையில் நடிகர் அனுபம் கெர் வாசித்தார்.
அந்த கடிதத்தில், ஹசாரே தனது உண்ணாவிரதத்தை இன்றுடன் முடித்துக்கொண்டு, எதிர்கால திட்டம் குறித்து அறிவிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.