அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அதற்கு யார் இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய அணு சக்தி துறையிடம் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி முதல் கட்டமாக கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் யூனிட்டுகளை ரஷ்யா அமைத்து கொடுத்தது.
இந்த காலகட்டத்தில் அணு பொறுப்பு சட்டம் இல்லை. தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது உலைகளை களை நிறுவ 3 புள்ளி 5 பில்லியன் டாலர் தொகை வழங்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் உலைகள் நிறுவும் போது என்ன விதிமுறைகள் பின்பற்றனவோ அதே விதிமுறைகள் இதற்கும் பின்பற்றப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அணுஉலை விபத்து இழப்பீடு சட்டமும் கொண்டு வரப்பட்டது. எனவே, மூன்று, நான்கு உலைகளுக்கு இந்த சட்ட திட்டங்கள் படி அணுஉலைகளை அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவில் அணு உலைகளை அமைக்க கையெழுத்திட்டுள்ளன.
அதற்கு முன்பாக இந்த விஷயத்தில் கருத்து தெளிவு பெற வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாகதான் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது, அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அதற்கு யார் இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய அணு சக்தி துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்டுள்ளார்.
இதனையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு அணு பொறுப்பு சட்டம் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூர் மக்களின் எதிர்ப்பு, சமூக ஆர்வலர்களின் போராட்டம் என பல்வேறு பிரச்சனைகளை ஏற்கெனவே சந்தித்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இப்போது புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.