2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை நடத்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டத் தயார் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த யோசனையை நிராகரித்துவிட்ட பா.ஜனதா, பட்ஜெட் கூட்டத்தொடரையும் முடக்கப்போவதாக அறிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மத்திய அரசு விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் அவரது இந்த யோசனையை பா.ஜனதா இன்று திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது:
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை ஏற்க முடியாது.நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
சிறப்பு கூட்டத்தொடர் என்ற பெயரில், அதை நீர்த்துப் போக செய்ய முடியாது. கூட்டுக்குழு விசாரணை மூலம் மட்டுமே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்.
எங்கள் நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் பிசக மாட்டோம். எனவே, கூட்டுக்குழு விசாரணை கோரி, பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரையும் முடக்க தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.