பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி தலைமையில் வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தது. டெல்லி தல் கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் நரேந்திர மோடி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் வைகோ பேசியதாவது:- இந்தியாவின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு இங்கு நடைபெறும் வழக்கறிஞர்கள் மாநாடு. நீதிக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகளுக்காக, நாதியற்றவர்களுக்காக, ஜனநாயகத்துக்காக, ஊழலற்ற அரசு அமைவதற்காக வாதாடும் வழக்கறிஞர்கள், நரேந்திர மோடிக்கு ஆதரவுக் குரல் தந்திட திரண்டிருக்கிறீர்கள். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. அலைகள் எழும் கன்னியாகுமரியிலிருந்து, பனி படர்ந்த இமயமலை வரை குக்கிராமத்தில், நகரங்கள் என அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கும் பெயராக மோடியின் பெயர் ஆகிவிட்டது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதுவரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத் தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையப் போகிறது. அக்கட்சி இந்தியா முழுவதும் நூறு இடங்களை கூட நெருங்க முடியாது. இரட்டை இலக்க வெற்றிதான் கிடைக்கும். ஆனால் நரேந்திர மோடிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கினால், பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமான வெற்றி கிடைக்கும்.