டெல்லி கற்பழிப்பு: மாணவியை பஸ்ஸை ஏற்றி கொல்ல முயன்றனர்!
, புதன், 2 ஜனவரி 2013 (14:54 IST)
டெல்லி கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பமாக ரோட்டில் வீசியெறிந்த பின்னர் மாணவியை பேருந்தை ஏற்றி கொல்ல முயன்றதாக போலீஸார் குற்றப்பத்திரிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.மாணவி பலாத்கார வழக்கில் அச்சிட்ட வடிவத்துக்கு பதில் மின் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்படுகிறது . ரகசியத்தை பாதுகாக்க கணினிவழி 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தகவல் தெரிவித்தனர். டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் நாளை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. உத்திர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டார். கடந்த 29ம் தேதி நடந்த இந்த குற்றம் தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 நாள் சிகிச்சை பலன் இன்றி மாணவி உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரையும் குற்றம்சாட்டி இவர்கள் மீது சுமார் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தயார் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்த சிங்கப்பூர் டாக்டர் உள்பட 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினந்தோறும் வழக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்தில் வழக்கு விசாரணை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றப்பத்திரிகை குறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளதாவது, மாணவியும், அவரது ஆண் நண்பரும் இரவு 9.30 மணிக்கு பஸ்சில் ஏறியுள்ளனர். பாலம் என்ற பகுதிக்கு பஸ் செல்வதாக கூறியதை தொடர்ந்து இருவரும் பஸ்சில் ஏறியுள்ளனர். ஆனால் பாலம் பகுதியை நோக்கி செல்லாமல் வேறு வழியாக பஸ் செல்ல தொடங்கியதும், அது குறித்து மாணவியின் நண்பர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பஸ்சில் இருந்த ஓட்டுனரின் உதவியாளர் அவரை தாக்கியுள்ளார். நண்பர் திருப்பி தாக்கியுள்ளார். கிளீனருக்கு ஆதரவாக டிரைவர் ராம்சிங் மற்றவர்களும் சேர்ந்து கொண்டு ஆண் நண்பரை தாக்கினர். உதவிக்கு வந்த மாணவியை தரதரவென பஸ்சின் கடைசி சீட்டுக்கு இழுத்து சென்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர். முதலில் டிரைவர் ராம்சிங் அவரை பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் நகத்தில் ஒட்டியிருந்த டிரைவர் ராம்சிங்கின் முடி மற்றும் தோலின் அடையாளங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.தவிர, பலவந்தப்படுத்திய 3 பேரை எதிர்த்து மாணவி கடுமையாக போராடியுள்ளார். அப்போது அவர்களை கடித்துள்ளார். குற்றவாளிகளின் உடம்பில் இருந்த காயங்களின் அடிப்படையில் இது நிரூபணமாகியுள்ளது. இவை அனைத்தும் புகைப்படமாக எடுத்து ஆதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.மாணவியையும் அவரது நண்பரையும் இரும்பு கம்பியால் குற்றவாளிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் மயக்கம் அடைந்து விட்டனர். அவர்களை வெளியில் தூக்கி வீசிய பின் பஸ்சை ஏற்றி கொல்ல குற்றவாளிகள் முயன்றுள்ளனர். இந்த குற்றங்கள் நிரூபிக்ககூடிய அனைத்து ஆதாரங்களும் குற்றப்பத்திரிக்கையில் அடங்கியுள்ளதாக டெல்லி சிறப்பு காவல்துறை கூறியுள்ளது.