Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்!

என்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்!
, செவ்வாய், 11 நவம்பர் 2008 (13:14 IST)
அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு பெற்ற பின்னர் பல்வேறு நாட்டுத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பராக் ஒபாமா, இந்தியப் பிரதமரிடம் பேசவில்லை என்பது குறித்த குற்றச்சாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ளார்.

கத்தார், ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கான 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து நேற்று நள்ளிரவு சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லி திரும்பிய போது, விமானத்தில் இருந்த செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ஒபாமா பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே (நவம்பர் 8) தம்மைத் தொடர்பு கொண்டு ஒபாமா பேச முயன்றதாகவும், ஆனால் அப்போதைய காலச்சூழல், போதிய நேரமின்மை காரணமாக இருவரும் ஒரே நேரத்தில் பேச முடியவில்லை என்றும் பிரதமர் விளக்கியுள்ளார்.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் தாம் தொடர்ந்து பயணத்திலேயே இருந்ததால் ஒபாமா தன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. புதுடெல்லி திரும்பியதும் விரைவில் இருவரும் பேசுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே ஒபாமா தனக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், அதற்கு தானும் பதில் கடிதம் அனுப்பியதாகவும் பிரதமர் அப்போது கூறினார்.

அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் பிரதமர் மன்மோகனிடம் தொடர்பு கொண்டு பேசாத காரணத்தால், ஒபாமா இந்தியாவைப் புறக்கணிக்கிறார் என செய்திகள் வெளியான நிலையில் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil