Jack the Giant Slayer - விமர்சனம்
, வெள்ளி, 15 மார்ச் 2013 (20:30 IST)
ஹாலிவுட்காரர்களுக்கு ஒரு வசதி. எதை கற்பனை செய்தாலும் அதனை படமாக்குகிற பட்ஜெட் அவர்களுக்கு உண்டு. இந்தப் படமும் அப்படியொரு கதைதான். பூமிக்கும் சொர்க்கத்துக்கும் நடுவில் அரக்கர்களின் உலகம் உள்ளது. அந்த அரக்கர்கள் தோற்றத்தில் படுபயங்கரமானவர்கள். அவர்களின் கட்டை விரலளவே இருக்கிறார்கள் மனிதர்கள். பூமிக்கு வந்து அட்டகாசம் செய்யும் அவர்களை எரிக் என்ற மன்னர் அடக்கி அவர்களை விரட்டிவிடுகிறார். எரிக்கிடம் இருக்கும் கிரீடம் அபூர்வமானது. அது யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் அரக்கர்கள். எதிர்த்தால் அரக்கர் உலகமே அழிந்துவிடும். ஆச்சா.. இதுதான் முன்கதை.
இந்தக் கதையை கேட்டு இரண்டு குழந்தைகள் வளர்கிறார்கள். ஒரு குழந்தை விவசாயியின் மகன் ஜாக். இன்னொரு குழந்தை இளவரசி இசபெல்லா. வளர்ந்த பிறகு இந்தக் குழந்தைகள் காதலிக்கப் போகிறார்கள், இவர்கள்தான் கதையை நகர்த்தப் போகிறார்கள் என்று நமது மனதில் தோன்றுவது அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியே நடக்கிறது.அரக்கர்கள் பூமிக்கு வர ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது சில அபூர்வமான விதைகள். அந்த விதைகளில் தண்ணீர் பட்டால் போதும் கிடுகிடுவென ராட்சஸ மரமாக வானம் கடந்து அரக்கர்களின் ராஜ்ஜியம்வரை வளரும்.தனது மாமாவுக்கு உதவும் பொருட்டு குதிரையை விற்க வரும் ஹீரோ ஜாக்கிடம் அந்த விதைகளை ஒரு துறவி தந்து மடத்தில் சேர்ப்பிக்கும்படி கூறுகிறார். அந்த விதைக்காக வரும் அரண்மனை வீரர்கள் துறவியை பிடித்துவிடுகிறார்கள். இசபெல்லாவுக்கு எல்லா இளவரசிகளும் சந்திக்கிற திருமணப் பிரச்சனை. மன்னர் தனது மகளை அமைச்சருக்கு மணமுடிக்க நினைக்கிறார். அந்தக் கிழ போல்டை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடிக்கடி அரண்மனையை விட்டு எஸ்கேப்பாகிறாள் இசபெல்லா. ஒருநாள் இரவு அவள் வந்து சேர்வது நமது ஹீரோவின் வீடு.