விரைவிலேயே அது ஆயுதக்கடத்தல் அல்ல போதைப் பொருள் கடத்தல் என்பது தெரிய வருகிறது. லோக்கல் தாதாக்கள் இருவரின் துணையுடன் சர்வதேச குற்றவாளி டேனியும் அதில் ஈடுபட்டிருப்பதை சூர்யா கண்டு பிடிக்கிறார். உள்ளூர் தாதாக்களை கட்டம் கட்டிய பின் சர்வதேச குற்றவாளி டேனியையும் டர்பன் சென்று கைமா செய்கிறார் சூர்யா.
வழக்கமான ஹரி படம். ஒரு தாதா, அவனை டார்கெட் செய்யும் ஹீரோ. ஹரியின் பெரும்பாலான படங்கள் பயணிக்கும் அதே பாதை. சாமியில் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் ரவுடியாக அறிமுகமாகி தடாலென போலீஸ் ஆபிஸராக விக்ரம் உருவெடுக்கும் பகுதியை சிங்கம் 2-வில் கொஞ்சம் விஸ்தாரமாக எடுத்திருக்கிறார். என்சிசி மாஸ்டராக இருந்தபடி குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கிறார் சூர்யா. அவர் திடுமென காக்கி அணிந்து டிஎஸ்பியாக சார்ஜ் எடுக்கும் காட்சியில் ஹரி படத்துக்கேயுரிய வேகம் தெரிகிறது.
சிங்கத்தில் வரும் அதே சூர்யா - அனுஷ்கா காதல்தான் இதிலும். இவர்களின் திருமணத்துக்கு சூர்யாவின் தந்தை ராதாரவி மறுப்பதற்கான காரணம் முதல் காட்சியிலேயே நமக்கு தெரிந்துவிடுவதால் ராதாரவியின் மௌனமும், அது சார்ந்த காட்சிகளும் வலுவிழந்துவிடுகிறது. என்சிசி மாஸ்டர் சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் பிளஸ்டூ மாணவியாக வருகிறார் ஹன்சிகா. அவரின் கதாபாத்திரமும், முடிவும் பரிதாபத்துக்குரியது.
ரகுமானை நல்லவராக அறிமுகப்படுத்தும் போதே அவர்தான் வில்லன் என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல் அவரும் லோக்கல் தாதா பாயும் எதிரிகள் என்று காண்பிக்கும் காட்சிகள். சூர்யாவுக்கு தெரியும் முன்பே நமக்கு அவர்கள் இருவரும் கூட்டுக்களவாணிகள் என்பதை யூகிக்க முடிகிறது.
எளிதில் யூகிக்க கூடிய திரைக்கதை என்றாலும் படத்தை பார்க்க வைப்பது சூர்யாவின் மிடுக்கு என்றால் மிகையில்லை. பற்ற வைத்த ராக்கெட் மாதிரியே மொத்த காட்சியிலும் வருகிறார். அதற்காக சிங்கத்தை மாதிரியே பாய்ந்து தாக்குவதும், பாடல் காடசியிலும் அவரை சிங்கம் போல காண்பிப்பதும் சிறுபிள்ளைத்தனம். சந்தானம் தவறு செய்துவிட்டு பரமண்டலத்திலுள்ள பிதாவை விளித்து பாவமன்னிப்பு கேட்கும் போதெல்லாம் சிரிக்க வைக்கிறார். ஒரே மாதிரியான டயலாக் டெலிவரிதான் என்றாலும் சிரிப்புக்கு நூறுசதம் கியாரண்டி. அவருடன் ஒப்பிடுகையில் காட்சிகளும் சிரிப்பின் சதவீதமும் விவேக்கிடம் கம்மி.
ரகுமானுக்கு அவ்வளவு பெரிய பில்டப் தந்துவிட்டு பிரவுன் சுகர் வைத்திருந்ததாக அவரை கைது செய்வது லோக்கல் கஞ்சா கேஸ் மாதிரி சப்பென்றாகிறது. அதே மாதிரி 12 வருஷமாக தரையில் கால் பதிக்காமல் கடலிலேயே இருக்கும் வில்லன் டேனியை சூர்யா டர்பனில் மடக்கிப் பிடிப்பதும். பில்டப்புக்கு ஏற்ற காட்சிகள் இல்லாததால் கிளைமாக்ஸ் சாதாரணமாகிவிடுவது சிங்கம் 2 வின் முக்கிய பலவீனம்.
காட்சிகளில் கதாபாத்திரங்கள்விடும் சவுண்டே பின்னணி இசை போலிருப்பதால் பின்னணி இசையை நமது செவிகள் தீண்டுவதேயில்லை. டிபிகல் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள். சிங்கம் பாடலில் அனுஷ்காவின் அபிரிதமான கவர்ச்சி தியேட்டரை தூக்குகிறது. ஹரியின் திரைக்கதையை போலவே ப்ரியனின் ஒளிப்பதிவும். நமக்கு முன்பே தெரிந்ததுதான்.
ஹரியின் படத்தில் என்னென்ன இருக்கும் என்பதை சிங்கம் 2 தெளிவுப்படுத்துகிறது. விறைப்பான ஹீரோ. ஹீரோவின் சுற்றமும் நட்பும் மட்டும் நல்லவர்கள். வில்லன்கள் 100 சதவீத அயோக்கியர்கள். ஜெய்சங்கர் படத்தைப் போல வில்லனை அறிமுகப்படுத்தும் போது அவன் யாரையாவது கொல்ல வேண்டும் (இதில் ஆஸ்திரேலிய போஸீஸ்). மூச்சுவிடாத டயலாக் டெலிவரி. தடதடவென போடப்படும் திட்டம் (அரைமணியில் மணப்பாடு வர்றதுன்னா காரில் வர முடியாது. நீங்க தெற்கு ரோடை பிளாக் பண்ணுங்க, நீங்க வடக்குப் பக்கம் பாலே பண்ணுங்க, கடல்ல கோஸ்ட் கார்டை அலார்ட் பண்ணுங்க. நம்மகிட்ட மாட்டாம எங்கேயும் தப்பிக்க முடியாது... இந்த மாதிரி).
ஹீரோயின் ஹீரோவை தவறாக நினைத்து சண்டைக்கு கிளம்பும்போது ஹீரோ படுமென்மையாக ஹீரோயினை ஹேண்டில் செய்து அவரின் மனதில் இடம் பிடிப்பது (சிங்கத்தில் அனுஷ்கா சூர்யாவின் கன்னத்தில் அறைய முற்படும்போது சூர்யா ஸாரி கேட்பது, சிங்கம் 2-வில் ஹன்சிகா சூர்யா தன்னை மாட்டிவிடுவார் என நினைக்கையில் அவருக்கு அனைவரையும் வைத்து சூர்யா ஹேப்பி பர்த்டே சொல்ல வைப்பது. சாமியில் த்ரிஷா விக்ரமை திருடன் என்று நினைத்து தாக்கிய சம்பவத்தை, பெண்ணுங்க இப்படிதான் விழிப்பா இருக்கணும் என்று விக்ரம் பாராட்டுவது...).
சர்வதேச குற்றவாளி, 12 வருடமாக கடலிலேயே இருப்பவர் என்று சொல்லப்படும் வில்லனை ஹரி எப்படி காண்பிக்கிறார் என்று பார்த்தாலே அவரின் கற்பனை வறட்சி அல்லது அவரின் ஸ்டீரியோ டைப் தெரிந்துவிடும்.
அரைகுறை ஆடை பெண்களை ரசிப்பது.... போதை ஏற்றிக் கொள்வது... கதைக்கு சம்பந்தமே இல்லாத ஆளை அறிமுகக் காட்சியில் போட்டுத் தள்ளுவது... ஹீரோவிடம் சவால் விடுவது... கடைசியில் நாயாக அடிபடுவது... லோக்கல் வில்லனுக்கும் சர்வதேச வில்லனுக்கும் என்ன இருக்கிறது வித்தியாசம்? லொகேஷனை தவிர?
மற்ற படங்களைப் போலவே இதிலும் சமூக விரோதிகளை, பந்த் என்ற பெயரில் கல்லெறிகிறவர்களை போலீஸ் பவரை வைத்து காட்டு காட்டென்று காட்டுகிறார் ஹீரோ. அதேநேரம் இந்த ரவுடிகளை தடவிவிடும், இவர்களை வளர்த்துவிடும் போலீஸ் அதிகாரிகளை ஹீரோ எதுவுமே செய்வதில்லை, இரண்டு டயலாக்குகள் திட்டுவதோடு சரி. நாலு ரவுடிகளை போட்டுத் தள்ளினால் நாற்பது பேர் திருந்துவார்கள் என்று லாஜிக் பேசும் ஹரி, இந்த நாலு பேரை வளர்த்துவிடும் இரண்டு போலீஸ் அதிகாரிகளை மட்டும் தடவிவிடுவது ஏன்? அவர்களைப் போட்டுத்தள்ள கஞ்சிபோட்ட காக்கி சட்டை ஹீரோவுக்கு என்ன மனத்தடை?
ஹரி போன்றவர்களின் படம் எப்போதும் அதிகாரத்தின் வன்முறையை கொண்டாடுவது, சரி என்று வாதிடுவது. சிங்கம் 2-வும் அப்படிதான். டேனி போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் டி-யை நிறுத்தக்கோரி மேலிடத்திலிருந்து ஹீரோவுக்கு பிரஷர் வருகிறது. உண்மையில் டேனி போன்றவர்களை வளர்த்துவிடுகிறவர்களே இவர்கள்தான். இவர்கள்தான் பிரச்சனையின் ஊற்றுக்கண். இவர்கள் யார்? ஹரியோ, துரைசிங்கமோ இவர்களைப் பற்றி பேசக்கூட முடியாது. நீட்டிப்பிடித்து ஒரு சல்யூட் வேண்டுமானால் அடிக்கலாம்.
விளக்கெண்ணைய்.. இது வெறும் சினிமா, பொழுதுபோக்கு.. இதுக்கு இந்த பேச்சா..?
ப்ரெண்ட்... நமக்கு காவிரி பிரச்சனை முதல் ஓசோன் ஓட்டைவரை எல்லாமே பொழுதுப்போக்குதானே. என்ஜாய்.