சிங்கம் 2 - விமர்சனம்!
, சனி, 6 ஜூலை 2013 (15:52 IST)
மிகப்பெரிய வெற்றி பெற்ற சிங்கத்தின் இரண்டாம் பாகம். சிங்கத்தின் முடிவிலிருந்து படம் தொடங்குகிறது.சிங்கத்தில் வில்லன் பிரகாஷ்ராஜை கொன்ற பின், தனது வேலையை ராஜினாமா செய்து தூத்துக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் என்சிசி மாஸ்டராக வேலைக்கு சேர்கிறார் சூர்யா. தூத்துக்குடியில் ஆயுதக்கடத்தல் செய்யும் கும்பலை கண்டுபிடிக்கதான் இந்த நாடகம் என்பது சூர்யாவுக்கும், அமைச்சர் விஜயகுமாருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
விரைவிலேயே அது ஆயுதக்கடத்தல் அல்ல போதைப் பொருள் கடத்தல் என்பது தெரிய வருகிறது. லோக்கல் தாதாக்கள் இருவரின் துணையுடன் சர்வதேச குற்றவாளி டேனியும் அதில் ஈடுபட்டிருப்பதை சூர்யா கண்டு பிடிக்கிறார். உள்ளூர் தாதாக்களை கட்டம் கட்டிய பின் சர்வதேச குற்றவாளி டேனியையும் டர்பன் சென்று கைமா செய்கிறார் சூர்யா.வழக்கமான ஹரி படம். ஒரு தாதா, அவனை டார்கெட் செய்யும் ஹீரோ. ஹரியின் பெரும்பாலான படங்கள் பயணிக்கும் அதே பாதை. சாமியில் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் ரவுடியாக அறிமுகமாகி தடாலென போலீஸ் ஆபிஸராக விக்ரம் உருவெடுக்கும் பகுதியை சிங்கம் 2-வில் கொஞ்சம் விஸ்தாரமாக எடுத்திருக்கிறார். என்சிசி மாஸ்டராக இருந்தபடி குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கிறார் சூர்யா. அவர் திடுமென காக்கி அணிந்து டிஎஸ்பியாக சார்ஜ் எடுக்கும் காட்சியில் ஹரி படத்துக்கேயுரிய வேகம் தெரிகிறது.
சிங்கத்தில் வரும் அதே சூர்யா - அனுஷ்கா காதல்தான் இதிலும். இவர்களின் திருமணத்துக்கு சூர்யாவின் தந்தை ராதாரவி மறுப்பதற்கான காரணம் முதல் காட்சியிலேயே நமக்கு தெரிந்துவிடுவதால் ராதாரவியின் மௌனமும், அது சார்ந்த காட்சிகளும் வலுவிழந்துவிடுகிறது. என்சிசி மாஸ்டர் சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் பிளஸ்டூ மாணவியாக வருகிறார் ஹன்சிகா. அவரின் கதாபாத்திரமும், முடிவும் பரிதாபத்துக்குரியது.