காதலிக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தேவைப்படும் பணத்தை கொடுத்து பரிமாறிக் கொள்வார்கள். இருவருமே சம்பாதிக்கலாம். ஒருவரை விட ஒருவர் அதிகமாக சம்பாதிக்கலாம். ஆனால் நிச்சயமாக ஆணுக்கு நல்ல வருமானம் இருக்கும் வேலையோ அல்லது தொழிலோ அவசியம்.
காதலுக்கும், காசுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். நிச்சயம் உண்டு. உங்களது மதிப்பை உயர்த்துவதே இந்த வேலையும், அதன் மூலம் வரும் வருவாயும்தான்.
சிலர் காதலியிடம் கடன் வாங்கி செலவு செய்வார்கள். அதில் சந்தோஷமும் படுவார்கள். உண்மையில், எந்தப் பெண்ணுமே காதலிக்கும் ஆணுக்கு கடன் தர விரும்புவதில்லை. அதேப்போல பெண்ணை நம்பி வாழும் ஆண்களை வெறுக்கவே செய்கிறார்கள்.
எவ்வளவு பணம் சம்பளமாக வாங்குகிறீர்கள் அல்லது செய்யும் தொழிலில் இருந்து எவ்வளவு வருமானம் வருகிறது என்று எந்த பெண்ணும் கவலைப்படுவதில்லை. ஆனால் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்களா என்பதை மிக முக்கியமாக கவனிக்கிறார்கள்.
இந்த ஒரு காரணத்தால் மட்டுமே பள்ளி, கல்லூரி நாட்களில் உண்டாகும் காதல் பெரும்பாலும் ஒன்று சேர்வதில்லை.
webdunia photo
WD
பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த ஓர் ஆண் திடீரென வேலை இழப்பதால் அல்லது தொழில் நட்டமடைவதால் பெரும் துன்பம் அடையும் நேரத்தில் கேட்காமலே உதவி செய்யும் மனப்பான்மை எல்லாப் பெண்களுக்கும் உண்டு.
அவள் விரும்புவது ஒவ்வொரு ஆணுக்கும் தனித்தன்மையும், சம்பாதிக்கும் திறமையும் வேண்டும் என்பதைத்தான். இதனைத்தான் உத்தியோகம் புருஷ லட்சணம் என்றார்கள்.
பெண் சம்பாதிக்கட்டும், நான் வீட்டை கவனித்துக் கொள்கிறேன். அவளது குழந்தைக்கு அப்பாவாக இருக்கிறேன் என்பது எல்லாமே காதலுக்கு உதவாத விஷயங்கள். பெண்ணுக்கும் சேர்த்து சம்பாதிக்கிறீர்களோ இல்லையோ முதலில் உங்களுக்குத் தேவையான அளவிற்காவது சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள்.
சம்பாதிப்பதை விட வேலைக்குச் செல்வதையும், தொழிலில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பதும் காதலின் ஒரு தகுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.