அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ள கபூல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சோனம் (வயது 19). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு, சோனத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நம்ம ஊர் காதலர்கள் போன்று ஊரை விட்டு ஓடிப் போகலாம் என்றோ, பெற்றவர்கள் மனதை மாற்றலாம் என்றோ யோசிக்கவில்லை இந்த காதலர்கள். காதல், சோனத்தின் கண்களை மறைத்தது. குடும்பத்தில் உள்ளவர்களை தீர்த்துக் கட்டினால்தான் தனது காதல் நிறைவேறும் என்று கருதினார். அதற்கான காரியத்தில் துணிச்சலுடன் இறங்கினார். விஷம் கொடுத்து எல்லோரையும் கொல்ல தீர்மானித்த சோனம், தனது காதலன் நவீனிடம் சொல்லி விஷத்தை வாங்கி வரச் செய்தார். பின்னர் அந்த விஷத்தை இரவில் யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் கலந்தார்.
அதை சாப்பிட்ட சோனத்தின் தந்தை சுரேந்தர், தாயார் புரோமில்லா, பாட்டி போரி, சகோதரர் அர்விந்த் மற்றும் விஷால், சோனிகா, மோனிகா என்ற 3 குழந்தைகள் ஆகிய 7 பேர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதே உணவை உண்ட சோனத்தின் தாத்தா வீட்டிற்கு வெளியே சென்று மயங்கி விழுந்துள்ளார்.
உடனே சோனம் தனது காதலன் நவீனை வீட்டுக்கு வரவழைத்தார். மயக்கத்தில் கிடப்பவர்கள் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்த இருவரும், அவர்களுடைய கழுத்தை நெரித்தனர். இதனால் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ஒரே வீட்டில் 7 பேர் இறந்து கிடப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, சோனம் வீட்டின் குளியல் அறையில் லேசாக மயங்கிய நிலையில் கிடந்தார்.
பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இதனால், மயங்கிய நிலையில் கிடந்த சோனத்தின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், 7 பேரையும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொன்றதை ஒப்புக் கொண்டார். தான் கொலையை செய்தது தெரியக் கூடாது என்பதற்காக சோனம் தூக்க மாத்திரைகள் சிலதை, தானும் பாதிக்கப்பட்டவர் போல் மயங்கி கிடந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சோனத்தையும் அவரது காதலன் நவீனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டவர்களில் சோனத்தின் தாத்தா தக்தீர் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் வீட்டுக்கு வெளியே மயங்கிவிழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் தனது குடும்பத்தை மட்டுமல்லாமல், தனது வாழ்க்கையையே இழந்துள்ள அந்த பெண், தவறான முடிவுகளுக்கு உதாரணமாக விளங்குகிறார்.