கேரளா மாநிலம் குருவாயூரில் புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 194 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
குருவாயூரப்பன் கோயில் திருமண வைபவங்களுக்கும், குழந்தைகளுக்கு முதன் முதலாக சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளும் அதிகமாக நடைபெறும் திருத்தலமாகும்.
ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஆவணி மாதத்தின் மிக முக்கியமான முகூர்த்த நாள் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான மணமக்கள் மற்றும் மணமக்களின் உறவினர் குருவாயூரப்பன் கோயிலுக்கு வந்து இருந்தனர்.
கோவிலில் ஒரே நாளில் நேற்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள் 194 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதற்காக கோவிலின் கிழக்கு வாயிலில் ஸ்ரீகிருஷ்ணர் சன்னதியை நோக்கி 2 மணமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. முகூர்த்த நேரம் முடிவதற்குள் அனைத்து மணமக்களும் விரைவாக தாலி கட்டி, மாலை மாற்றிக் கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 167 மணமக்களுக்கு இங்கு திருமணம் நடந்ததே ஒரே நாளில் அதிக திருமணங்கள் நடந்து இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நேற்றைய 194 திருமணங்கள் முறியடித்து உள்ளது. இதுவரை இங்கு நடந்த திருமணங்களிலேயே இதுதான் அதிகமா என்பதை உறுதி செய்ய முடிய வில்லை என்று கோவில் மேலாளர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.