இணையம் என்றும் நம்முடன் வராது
, வியாழன், 8 அக்டோபர் 2009 (12:12 IST)
இணையத்தில் சாட்டிங் மூலம் அறிமுகமாகி, நண்பர்களாகி, காதலர்களானவர்களும், தம்பதிகளானவர்களும் நிறையப் பேர் உண்டு. ஆனால், இந்த இணையத்திற்கு அடிமையாகி வாழ்க்கையையே இழந்தவர்களும் ஏராளமானவர்கள் உண்டு.சாட்டிங் மூலம் காதலித்து, திருமணம் முடிந்த தம்பதிகளில் கூட, ஒரு சிலர், தங்களது துணை, எப்போதும் கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு அழுவதாக புலம்புவார்கள்.இப்படி இருக்க, பெற்றோர் பார்த்து மணம் முடித்த தம்பதியான ஒரு இளம் ஜோடிகளின் வாழ்க்கையில் பிளவு ஏற்படக் காரணமானதே, பெண்ணின் இணையத்தின் மீதான பைத்தியம்தான்.மும்பை மீரா ரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும் (பெயர்மாற்றம்), கமலிக்கும் (பெயர் மாற்றம்) கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஏழே மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக குடும்ப நீதிமன்றப் படியேறி இருக்கிறார் கமல் மிஷ்ரா.ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறியிருப்பது, அவள் இணையத்தில் சாட்டிங் செய்வதில் அடிமையாக இருக்கிறாள் என்பதுதான்.சாட்டிங் செய்வதற்காகவா ஒரு பெண்ணை, அவளது கணவன் விவாகரத்து செய்கிறான் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆம். அவர் கூறுவதைக் கேளுங்கள். அதிகாலை 5.30 மணிக்கே அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு சென்றுவிடும் கமலி, மூன்று மணி நேரம் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவாள். நான் அவளுக்குப் பொறுமையாக எடுத்துக் கூற முயன்றேன். ஆனால் அவள் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தான் யாருடன் சாட்டிங் செய்கிறேன் என்பது பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அடித்துப் பேசிவிடுவாள். அவள் பிரவுசிங் சென்டரில் இருக்கும்போது செல்போனை எடுத்துக் கூட பேசுவதில்லை என்று புலம்பித் தீர்க்கிறார் ஸ்ரீதர்.இது பற்றி மனைவியிடம் பேசியபோது, தனது தந்தையின் தொல்லையால் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகப் போட்டு உடைத்தார். தனக்கு திருமணத்தில் ஆர்வமில்லாததால், நண்பர்களுடனும், புதியவர்களுடனும் மும்முரமாக சாட்டிங் செய்து வருகிறேன் என்கிறாளாம் அவள். சரி சாட்டிங் செய்வது மட்டும்தானே. அதை கொஞ்சம் அனுசரித்துக் கொண்டால் போதுமே என்று அறிவுரை கூறுவதற்கும் வாய்ப்பில்லை. புகுந்த வீட்டினருடன் கமலி சகஜமாக பழகுவதில்லை. அவர்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டது தான் இந்த முடிவெடுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளது என்கிறார் ஸ்ரீதர். எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவள் மோசமாகத்தான் நடந்துகொண்டாள். புதிய சூழ்நிலையால்தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள், பழகினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்று எனக்கு சில நாட்களிலேயே புரிந்து விட்டது. வீட்டின் மருமகளாக அல்லாமல், வீட்டில் ஒருத்தியாகக் கூட அவள் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தினரையும் மட்டமாகப் பேசினாள். பணி விஷயமாக தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாத காலப் பயணம் சென்ற போதாவது, அவள் என் குடும்பத்தாருடன் அனுசரணையாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்போதும் நிலைமை மாறவில்லை. சொல்லப் போனால் நிலைமை இன்னும் மோசமானது. அதற்குப் பிறகுதான் நான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று முடிக்கிறார் ஸ்ரீதர். ஸ்ரீதரின் வழக்கறிஞர் கூறுகையில், விவாகரத்துக் கோருவதற்கான காரணத்தை கூறியபோது நான் வியப்படைந்தேன். ஆனால் அந்த பெண்ணின் நடவடிக்கை ஒட்டுமொத்தக் குடும்பத்தையே எரிச்சலுக்கு உள்ளாக்கியிருப்பது தெரிந்த பிறகுதான் விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றத்தில் கடந்த வாரம் நாங்கள் தாக்கல் செய்தோம் என்றார்.
தனது பிறந்த வீட்டில் இருக்கும் கமலி, இதற்கெல்லாம் விவாகரத்து கேட்பார் என்று நான் நினைக்கவேயில்லை என்று பதிலளிக்கிறார் மிக எளிமையாக.இந்த பெண், இணையத்திற்கு அடிமையாகி, நல்ல வாழ்க்கையை இழக்கப் போகிறார் என்று நமக்கெல்லாம் புரிகிறது. ஆனால், அந்த பெண்ணோ இணையம்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் சாட்டிங் செய்யும் யாராவது ஒருவராவது அவளுக்கு இதனை புரிய வைத்தால் நல்லது.