Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Cloud Computing தொழில்நுட்பத்தின் பயன்களும், பாதகங்களும்

Cloud Computing தொழில்நுட்பத்தின் பயன்களும், பாதகங்களும்
புதுடெல்லி , வெள்ளி, 30 அக்டோபர் 2009 (18:13 IST)
ஐ.டி. துறையில் அண்மைக் காலமாக அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகியிருக்கிறது Cloud Computing. இந்த புதிய தொழில்நுட்பத்தின் பயன்கள்/பாதகங்கள் பற்றி ISACA எனப்படும் சர்வதேச நிறுவனம் விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது.

தற்போது ஒவ்வொரு இணையதள நிறுவனமும் தனக்கென தனி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை (குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சர்வர் (Server)) பராமரித்து வருகிறது. இது ஐ.டி. நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த சர்வர்கள் சக்தி வாய்ந்தவை என்பதால் அவற்றுக்கான முதலீடு, பராமரிப்பு செலவு, மின்சாரத் தேவை ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனங்களும் பயன்படுத்தி வரும் சர்வர்களை ஒன்றாக இணைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த தொழில்நுட்பத்தின் பெயர்தான் Cloud Computing. உதாரணமாக சென்னையில் உள்ள அனைத்து ஐ.டி., இணையதள நிறுவனங்களும் அந்நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சர்வரை பயன்படுத்துவதாக வைத்துக் கொண்டால், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி சர்வர் என்ற எழுதப்படாத விதி உடைக்கப்படும்.

அந்த பிரம்மாண்ட சர்வரைப் பயன்படுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை ஆண்டு சந்தாவாக செலுத்தி விட்டால் போதும். இது ரயிலில் பயணம் செய்வது போலத்தான். வாகனத்தில் பயணம் செய்தால் அனைவருக்கும் ஒரு வாகனமும், பெட்ரோல் செலவும் பிடிக்கும். ஆனால் அனைவரும் ரயிலில் சென்றால் பயணச் செலவு குறையும். அதுபோலத்தான் இந்த Cloud Computing தொழில்நுட்பமும் செயல்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஐ.டி., இணையதள நிறுவனங்கள் Cloud Computing தொழில்நுட்பத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கத் துவங்கியுள்ளன.

இதற்கு காரணம், எதிர்காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு நிச்சயம் அதிகரிக்கும் என்பதால், இணையத்தில் சேமித்து வைக்க வேண்டிய தகவல்களின் அளவும் பன்மடங்கு அதிகரிக்கும். இதற்காக புதிது புதிதாக விலையுயர்ந்த சர்வர்களை வாங்கிக் குவிக்க ஐ.டி., இணையதள நிறுவனங்கள் கொள்ளைக் காசை செலவழிக்க வேண்டும்.

ஆனால் Cloud Computing தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கினால் காசு மிச்சமாகும் என்பதுடன் சர்வர்களைப் பராமரிக்க வேண்டிய சிக்கலான செயலும் அவர்களுக்கு இருக்காது என்பதுதான் Cloud Computing தொழில்நுட்பத்தின் முதல் வெற்றி.

உலகம் முழுவதும் 86 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டுள்ள ISACA (Information Systems Audit and Control Association) அமைப்பு Cloud Computing தொழில்நுட்பத்தின் பயன்களும், பாதகங்களையும் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புதான் உலகளவில் தகவல் பகிர்வு தொடர்பான பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகளை மேற்கொள்கிறது.

ISACA தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (isaca.org/cloud) வெளியிட்டுள்ள அறிக்கையில், Cloud Computing தொழில்நுட்பம் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பமாக உருவெடுக்கும். இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்காக ஐ.டி. மற்றும் இணையதள நிறுவனங்கள் தங்களின் கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil