உங்கள் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற தமிழ்.வெப்துனியா.காம் இன்று 10 ஆண்டுகளைக் கடந்த 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
2000வது ஆண்டு இதேபோன்று சித்திரைத் திருநாளில் பெரிதாக அறியப்படாமல் எளியப் பிறப்பெடுத்த வெப்உலகம்.காம், இன்று தமிழ்.வெப்துனியா.காம் என்ற இணைய முகவரியுடன் உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒர் இணை பிரியா அங்கமாகத் திகழ்கிறது.
இன்றைக்கு உலகின் பல கோடிக்கணக்கான இணையத்தளங்களில் தனக்கென ஒரு இடத்தை தமிழ்.வெப்துனியா.காம் பிடித்துள்ளது மட்டுமின்றி, தமிழ் மொழியின் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு வாசகர்களாகிய உங்களுடன் அது கொண்டுள்ள பிரிக்க முடியாத உறவல்லவா காரணம். இணையத்தில் தமிழின் சிறப்பை நிலைநிறுத்திய குறிப்பிடத்தக்க தளங்களில் ஒன்றாக தமிழ்.வெப்துனியா.காம் திகழ்கிறது என்றால், உலக விவரங்களை நம் மொழியில் அறிந்து கொள்ள தமிழ் மக்களாகிய நீங்கள் காட்டிய ஆர்வம் அன்றோ அதற்கு முழு முதற் காரணம்.
உங்களின் விருப்பம், ஈர்ப்பு, அவசியம் ஆகியவற்றை நன்கறிந்து அதற்கேற்ப செய்திகளில் இருந்து சினிமா வரை, ஜோதிடத்தில் இருந்து ஆன்மீகம் வரை, கிரிக்கெட்டிலிருந்து டென்னிஸ் வரை பல்வேறு பிரிவுகளில் தொகுத்து நாங்கள் வழங்கியதும், அதனை ஒவ்வொரு முறையும் பாராட்டி நீங்கள் அளித்த ஊக்குவிப்பும் தானே காரணம்.
இந்த அளவிற்கு தமிழர்களின் எண்ணங்களை அறிந்து செயலாற்றிய தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தை மெருகூட்ட எமது இதழியலாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பும், சுதந்திரமும் அளித்த எமது நிறுவனமான வெப்துனியா.காம் இந்தியாவும் மிக முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் தேவைகள், எண்ணங்கள் என்று நின்றுவிடாமல் அவர்களின் உணர்வுகளையும் நாங்கள் சிறப்பாக பிரதிபலித்துள்ளோம் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஆயினும், எந்த இடத்திலும் உண்மையை உரைப்பது என்ற நிலையில் இருந்து ஒருபோதும் நிலை தவறியதில்லை என்பதும் நீங்கள் அறியாததல்ல. விவரங்களைக் கூறும் போது உண்மையில் நின்றே உரைப்பது என்று நாங்கள் செயலாற்றியது சில வேளைகளில் அதீதமாக கருதப்பட்டாலும், பிறகு அந்நிலை சரியென்று வாசகர்களாகிய உங்களால் உணரப்பட்டது. அது தாங்கள் கடைபிடித்த நேர்மைக்கு அத்தாட்சி.
தமிழினப் பிரச்சனைகள் மட்டுமின்றி, நம் நாட்டை எதிர்கொண்ட எண்ணற்றப் பிரச்சனைகளிலும், உலகத்தின் போக்கை மாற்றிய சிக்கல்களிலும் ‘உள்ளது உள்ளபடி உரைக்கும்’ பணியை எங்களால் இயன்றவரை செவ்வனே செய்துள்ளோம். உங்களின் ஈடிணையற்ற ஆதரவு இல்லையெனில் இவை எதுவும் சாத்தியமாகியிருக்காது.
‘நீங்கள்தான் நாங்கள், நாங்களே நீங்கள்’ என்ற பிரிக்க முடியாத ஒரு செயல் மன நிலையில் இருந்து எங்களால் இயன்ற அளவிற்கு உங்களின் எதிர்பார்ப்பை இனி வரும் காலங்களிலும் நிறைவேற்றுவோம் என்பதை இந்த இனிய தருணத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்கு எங்களின் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.