சீன மற்றும் கொரிய செல்பேசி சாதனங்களின் இணைப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் துண்டிக்கப்படும் என்ற செய்தியை அறிந்து கவலைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி இது.
அதாவது ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளை பயங்கரவாதிகளும், குற்றவாளிகளும் பயன்படுத்தி எளிதில் தப்பி விடலாம் என்ற காரணத்தால் சீன மற்றும் கொரிய செல்பேசிகளின் இணைப்பை துண்டிக்க தகவல் தொடர்புத் துறை முடிவு செய்தது.
இந்நிலையில், செல்போன் விற்பனையாளர்களும், இத்துறையைச் சார்ந்தவர்களும் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி ஐ.எம்.இ.ஐ. எண் குறிப்பிடப்படாத சாதனங்களில் புதிய எண்ணைக் குறிப்பிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்று, ஐ.எம்.இ.ஐ. எண் குறிப்பிடப்படாத செல்போன் சாதனங்களை வைத்திருப்பவர்கள், ரூ.100 கட்டணம் செலுத்தி புதிய எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
புதிய எண்ணைப் பெற்ற பிறகு செல்போன் சாதனங்கள் விற்பனையாளர்கள் அந்த எண்ணைப் பதிவு செய்து கொள்வர்.
அதன் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர் யார், யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அரசு அமைப்புகள் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கான காலக்கெடு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.