புதுடெல்லி: பிரதமர் அலுவலகத்தின் மின்னஞ்சல் கடந்த ஆண்டு 3 மாதங்களாக வைரஸ் தாக்கி முடங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் என்பது பொதுமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதற்காக தனித் துறையே இயங்கி வருகிறது.
இங்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து புகார்கள் மற்றும் பல்வேறு கருத்துக்களை பெறுவதற்காக மின்னஞ்சல் சேவை செயல்பட்டு வருகிறது.
இதை நிர்வகிக்க கணினி தொழில்நுட்ப நிபுணர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இவ்வளவு இருந்தும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 3 மாதங்கள், பிரதமர் அலுவலக மின்னஞ்சல் வைரஸ் தாக்குதலால் முடங்கி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
விமானப்படையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஏர் -கமோடர் லோகேஸ் பத்ரா என்பவர், தகவல் உரிமை சட்ட விவரங்கள் இந்தியில் தெளிவாக கூறப்படாமல் இருப்பதாகவும், அதை சரி செய்யுமாறும் கடந்த ஆண்டு மார்ச்சில் பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.
ஆனால், அதற்கு பதிலும் வராததால், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டார்.
பத்ராவின் மனுவை மத்திய தகவல் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா விசாரித்து, பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டார்.
பிரதமர் அலுவலக அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில்தான், 3 மாதங்கள் வைரஸ் தாக்கப்பட்டு இருந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. அந்த குறைபாடு ஏப்ரலில் கண்டுபிடிக்கப்பட்டு, ஏற்கனவே இருந்த மின்னஞ்சல் நீக்கப்பட்டு, புதிய மின்னஞ்சல் துவக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
அந்த மூன்று மாதங்களில் வந்த மின்னஞ்சல்களின் கதி என்ன என்று யார் கூறுவார்கள்.