இந்தியன் வங்கி சார்பில் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சில்லறை மாற்றும் இயந்திரம் நேற்று தொடங்கப்பட்டது. ரூபாய் தாளை போட்டு ஒரு ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில்லறைத் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே சில்லரை மாற்றும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் செலவில் இந்தியன் வங்கி இதை அமைத்துள்ளது.
கோவிலின் மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் இந்த சில்லரை மாற்றும் கருவியின் தொடக்க விழா நேற்று நடந்தது.
இது குறித்து இந்தியன் வங்கி தலைவர் எம்.எஸ்.சுந்தர்ராஜன் பேசுகையில், ஏற்கனவே காஞ்சீபுரத்தில் உள்ள அம்மன் கோவிலில் இதுபோன்ற இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கியிருக்கிறோம். 10, 20 ரூபாய் தாள்களை போட்டு ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களை இந்த இயந்திரத்தில் இருந்து பெறலாம். முதல் கட்டமாக, ஒரு ரூபாய் நாணயங்கள் கிடைக்கும்.
இனிமேல் சில்லறைக்காக பக்தர்கள் அலைந்து திரிய வேண்டாம். ரூ.5 ஆயிரம் அளவிற்கு ஒரு ரூபாய் நாணயங்கள் இந்த இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும். அது குறையும் போது மயிலாப்பூர் இந்தியன் வங்கி கிளை மூலம் இந்த இயந்திரத்தில் நாணயங்கள் நிரப்பப்படும். எங்கெல்லாம் சில்லறைகளுக்கான தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.